சென்னை: கடந்த 2011 முதல் 2021ம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சி காலத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களுக்கு எதிராக அரசு சார்பில் ஏராளமான அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன. இந்நிலையில் சென்னை மாநகராட்சி டெண்டர் முறைகேடு, வாக்கிடாக்கி கொள்முதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து அப்போதைய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்திருந்தார்.இதையடுத்து, அரசுக்கு எதிராகவும், முதல்வர், அமைச்சர்களுக்கு எதிராகவும் ஆதாரமில்லாத குற்றசாட்டுகள் கூறியதாக 16 கிரிமினல் அவதூறு வழக்குகள் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது தமிழக அரசின் சார்பில் தொடரப்பட்டது.
கடந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பேற்றதும் கடந்த ஆட்சியில் அரசியல் கட்சி தலைவர்களுக்கு எதிராக தொடரப்பட்ட அனைத்து அவதூறு வழக்குகளும் திரும்பப் பெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள அவதூறு வழக்குகளை திரும்பப்பெற தமிழக அரசின் சார்பில் அரசாணை பிறப்பிக்க இருப்பதாகவும் 16 வழக்குகளை திரும்பப் பெற அனுமதிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி நிர்மல்குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மு.க.ஸ்டாலினுக்கு எதிராக நிலுவையில் உள்ள 16 கிரிமினல் அவதூறு வழக்குகளை திரும்பப் பெற அனுமதிப்பது தொடர்பான மனு மீது வரும் 17ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று தெரிவித்த நீதிபதி, வழக்கை தள்ளிவைத்தார்.